வைகை அணை நீர்த்தேக்கம்





வைகை அணை நீர்த்தேக்கம்
தேனி மாவட்டத்தில் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகி ஓடி வரும் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைகை அணை 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.







பூங்காக்கள்
வைகை அணையின் இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக அழகிய பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே இரு புறமும் உள்ள பூங்காக்களுக்குச் செல்ல முடியும். இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கை வடிவமைப்பில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.






மிருகக் காட்சி சாலை
இந்த வைகை அணைப் பகுதியிலுள்ள பூங்காவை அடுத்து ஒரு மிருகக்காட்சி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட தனிக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்த மிருகக் காட்சி சாலை சரியான பராமரிப்பின்றி நிறைய கூண்டுகள் காலியாக உள்ளன. ஒரு சில பறவைகள், மான், முயல், எலி, பாம்பு என்று அடிக்கடி வெளியில் பார்வையிடும் இனங்களே இக்காட்சி சாலையில் இடம் பெற்றுள்ளன.

தரை வடிவமைப்பு
இம்மிருகக்காட்சி சாலையை ஒட்டி வைகை ஆறு உற்பத்தியாகி அது இராமநாதபுரம் கண்மாயில் கலக்கும் இடம் வரையுள்ள பகுதிகள் தரையில் வரைபடம் போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுள் சென்று பார்வையிடும் பொழுது வைகை நீர் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களுக்குப் பயனளிக்கும் விதத்தை எளிமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

உல்லாசத் தொடருந்து
இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உல்லாசத் தொடருந்துக்குத் தனிக் கட்டணம் செலுத்தி பூங்காவை உல்லாசமாகச் சுற்றி வரலாம். இந்த உல்லாசத் தொடருந்து செல்லும் வழியில் சில குகைகள் இருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.

நீர்மின் உற்பத்தி நிலையம்
வைகை அணையின் கீழ் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் விசை மூலம் மின் உற்பத்தி செய்யும் வைகை நீர்மின் சக்தி திட்டம் ஒன்று இயங்கி வருகிறது. இது மொத்தம் ஆறு மெகாவாட் திறன் கொண்டது. இதில் மூன்று மெகாவாடாக இரண்டு அலகுகள் உள்ளன. முதல் அலகு 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் இயக்கப்படுகிறது.[2][3] இந்த நீர்மின் உற்பத்தி நிலையத்திற்குள் சென்று பார்வையிட அனுமதி இல்லை.

ஆய்வு நிறுவனம்
அரிசி, சோளம், கௌப்பி உட்படப் பல்வேறு வகையான தானிய வகைகளை ஆராய்வதற்காக வைகை அணைக்கட்டுக்கு அருகே தமிழ்நாடு அரசு ஒரு விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைத்துள்ளது.


Comments