மகாமக குளம்

கும்பகோணம் மகாமகக் குளம், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள்

வரலாறு
ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் என நம்பப்படுகிறது. ஒரு முறை அவ்வாறு நடந்ததன் தொடர்ச்சியாகப் பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். "கும்பம்" என்றால் பானை "கோணம்" என்றால் உருக்குலைந்து என்பதால் கும்பகோணம் பெயர் பெற்றது.

ஒருவர் செய்த பாவங்கள் புண்ணியத் தலங்களிலுள்ள தீர்த்தங்களில் நீராடினால் அகலும். அப்புண்ணியத் தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியிலுள்ள கங்கையில் நீராடினால் அகலும். காசியிலுள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணம் தீர்த்தத்தில் நீராடினால் விலகும். கும்பகோணத்தில் இருப்பவர்கள் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால்தான் அகலும் என வடமொழி நூல் வலியுறுத்திக்கூறுகிறது. கும்பகோணத்திலுள்ள தீர்த்தம் மகாமக தீர்த்தம். அமுதத்தின் ஒரு பகுதி இங்கு தீர்த்தமானதால் அமுத தீர்த்தம் எனவும், பிரமன் இத் தீர்த்தத்தினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து ஆராதித்ததால் பிரம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றது. மகாமகப் பெருவிழா வடபுலத்தில் நிகழும் கும்பமேளாவைப் போன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது.


குளத்தை பற்றி

மகாமகக் குளத்தின் இரவுநேரத் தோற்றம்
இது 6.2 ஏக்கர் பரப்பளவில் கும்பகோணம் நகரின் மத்தியில் சரிவகம் வடிவில் அமைந்துள்ள குளம் ஆகும். இந்த குளத்தை சுற்றி 16 மண்டபங்களும் 21 கிணறுகளும் உள்ளன. இந்த கிணற்றின் பெயர்கள் ஒன்று சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் விசயநகர மன்னர் கிருட்டிணதேவராயர் இத்தலத்திற்கு வந்து நீராடியதாக நாகலாபுரம் கல்வெட்டு குறிக்கிறது. தஞ்சாவூரை சார்ந்த ரகுநாத நாயக்கரின் படைத்தலைவர் கோவிந்த தீட்சிதர் இந்த குளத்தைச் சுற்றி 16 மண்டபங்களையும் அதனைச் சார்ந்து படிகளையும் அமைத்துள்ளார்.


குளத்தைச் சுற்றியுள்ள மண்டபங்களும் கிணறுகளும்
16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோயில்கள் (மண்டபங்கள்) காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தானேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரணேஸ்வரர், கோணேஸ்வரர், பக்திகேஸ்வரர், பைரேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்ளேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 வகையான சிவலிங்கங்கள் குளத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்படங்களில் காணப்படுகின்றன. [4]இந்த குளத்தின் நடுவே அமைந்துள்ள தீர்த்தக் கிணறுகள் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

தீர்த்தத்தின் பெயர் அதனை சார்ந்த தெய்வங்கள்
வாயு தீர்த்தம்                 வாயு (காற்று)
கங்கா தீர்த்தம்         கங்கை (ஆறு)
பிரும்ம தீர்த்தம்         பிரம்மா
யமுனா தீர்த்தம்        யமுனா (ஆறு)
குபேர தீர்த்தம்                 குபேரன் (வான் சார்ந்த கடவுள்)
கோதாவரி தீர்த்தம்      கோதாவரி (ஆறு)
ஈசான தீர்த்தம்        சிவன்
நர்மதை தீர்த்தம்        நர்மதை (ஆறு)
சரஸ்வதி தீர்த்தம்        சரஸ்வதி (கடவுள்)
இந்திர தீர்த்தம்       இந்திரன் (வான் சார்ந்த கடவுள்)
அக்னி தீர்த்தம்      அக்னி (நெருப்பு)
காவிரி தீர்த்தம்       காவிரி (ஆறு)
யம தீர்த்தம்               யமன் (வான் சார்ந்த கடவுள்)
குமரி தீர்த்தம்               பார்வதி (பெண்கடவுள்)
நிருதி தீர்த்தம்               பார்வதி (பெண்கடவுள்)
பயோஷினி தீர்த்தம்  பார்வதி (பெண்கடவுள்)
தேவ தீர்த்தம்              சிவன் (கடவுள்)
வருண தீர்த்தம்      வருணன் (வான் சார்ந்த கடவுள்)
சரயு தீர்த்தம்              சரயு (ஆறு)
கன்யா தீர்த்தம்       பார்வதி (பெண்கடவுள்)


மகாமகம்

மாசி மாதமன்று குரு கும்பராசியில் இருக்கும் பொழுது, மகம் நட்சத்திரமும், பூராடன நட்சத்திரமும் பொருந்தி வரும் காலம் மகாமகம் ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும்.

மகாமகம் புராணக் கதை
இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.


மகாமகம் தொடர்புடைய சைவக் கோயில்கள்

மாசிமகவிழாக் காட்சி
சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. [5] இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

மகாமகம் தொடர்புடைய சைவக் கோயில்கள்

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்
வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்
உறி (சிக்கேசம்) விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்
பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்
தேங்காய்(நாரிக்கேளம்) விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்
சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்
புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்(இக்கோயிலின் கிணறு)
சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்
அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்




மகாமகப் புண்ணிய காலம்
தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வருகிறது. பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது. [6] இதுவரை மகாமகம் 1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743, 1755,1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. [7]

அகம் என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. மா என்றால் அணுகாது என்று பொருள். எனவே, மாஅகம்=மாகம் (மாமகம்-மிகப்பெரிய பாவ நீக்கம்). 











Comments